மேலும்

மைத்திரியை சந்தித்தது உண்மை, மகிந்த தேசப்பிரியவும் இருந்தார் – மல்கம் ரஞ்சித் ஒப்புதல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்று இரவு, சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கு தான் சென்றதை ஒப்புக் கொண்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அங்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவும் இருந்தார் என்றும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அரசிதழ் கடந்த 9ஆம் நாள் வரையப்பட்ட போது, சிறிலங்கா அதிபரின் செயலகத்தில், கர்தினால் மல்கம் ரஞ்சித், முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா, ஆகியோர் இருந்தனர் என்றும், தேர்தல் நாள் பற்றிக் கணக்கிடுவதற்காக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவும் அழைக்கப்பட்டிருந்தார் என்றும் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

நாடாளுமன்றக் கலைப்பு சதிக்குப் பின்னால் இந்த மூவரும் இருந்தனர் என்ற குற்றச்சாட்டு வெளியானதை அடுத்து, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த நொவம்பர் 9ஆம் நாள் இரவு தான் அதிபர்  செயலகத்துக்கு சென்றது உண்மை என்றும், அங்கு மகிந்த தேசப்பிரிய இருந்ததைக் கண்டதாகவும், எனினும், சரத் என் சில்வா அங்கு இருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபரை தான் அன்று சந்தித்த போதும், நாடாளுமன்றக் கலைப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு தானும், இத்தபனே தம்மாலங்கார தேரரும் தயாராக இருப்பதாக சிறிலங்கா அதிபரிடம்  கூறியதாகவும், அதற்கு இணங்கியிருந்த அவர், திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தம்மை ஏமாற்றிய நடவடிக்கை என்றும் அந்த அறிக்கையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *