மேலும்

பிரித்தானிய ஆயுதப்படைகளில் சிறிலங்காவில் உள்ளவர்களும் இணையலாம்

பிரித்தானியாவில் வசிக்காத இலங்கையர்களும் கூட பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

இந்தியா, சிறிலங்கா, அவுஸ்ரேலியா, கென்யா, பிஜி, உள்ளிட்ட கொமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்கள்- பிரித்தானியாவில் வசிக்காத போதும், பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரித்தானிய ஆயுதப்படைகளில் சேர்த்துக் கொள்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்தும் இந்த முடிவு நேற்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் இணைந்து கொள்வதற்கு, குறைந்தது ஐந்து ஆண்டுகள் அங்கு வசித்திருக்க வேண்டும் என்ற- 1998இல் கொண்டு வரப்பட்ட விதிமுறையை தளர்த்துமாறு, பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு,  நாடாளுமன்றத்திடம் யோசனையை முன்வைத்துள்ளது.

பிரித்தானிய கடற்படை, விமானப்படை, இராணுவம் ஆகியவற்றுக்கு கொமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 1350 பேரைச் சேர்த்துக் கொள்வதற்காக, 5 ஆண்டுகள் பிரித்தானியாவில் வசித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்த முடிவு செய்திருக்கிறோம் என்று பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து கொமன்வெல்த் நாடுகளில் இருந்தும் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வோம், 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

பிரித்தானிய ஆயுதப்படைகளில் தற்போது 8200 வெற்றிடங்கள் உள்ளன. அதனை நிரப்புவதில் சிக்கல்கள் உள்ள நிலையிலேயே கொமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்களை தமது படைகளில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய ஆயுதப்படைகளில் தற்போது 4500 கொமன்வெல்த் நாட்டவர்கள் பணியாற்றுகின்றனர். 3940 பேர் பிரித்தானிய இராணுவத்திலும், 480 பேர், றோயல் கடற்படையிலும், 80 பேர் விமானப்படையிலும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *