மேலும்

அரசியல் நகர்வுகள் ஆராய கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு நாளை கூடுகிறது

சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் தீவிரமடைந்துள்ள கட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், உயர்மட்டக் குழு நாளை அவசரமாக கூடி ஆராயவுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசியல் குழப்பங்கள் ஏற்பட்ட பின்னர், முதலில் ரணில் விக்ரமசிங்கவையும், பின்னர், மகிந்த ராஜபக்சவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

எனினும், இரண்டு தரப்புகளும் கூட்டமைப்பின் ஆதரவைக் கோரியுள்ள போதிலும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பது, மற்றும் ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது ஆகிய இரண்டு கோரிக்கைளுக்கும் இணங்கி எழுத்துமூலமான உறுதியை வழங்கினாலேயே எந்த தரப்புக்கும் ஆதரவளிக்க முடியும் என்று கூட்டமைப்பு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.

இந்த விடயங்களை உள்ளடக்கியதாக, இதுவரை நடத்தப்பட்ட பேச்சுக்களில் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், நாளை மாலை  4 மணியளவில் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தை, இரா.சம்பந்தன் கூட்டியுள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும், கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *