சிறிலங்கா அதிபருக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை?
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சிகளில், ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்ரமசிங்கவை முறையற்ற வகையில் பதவிநீக்கம் செய்து, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கை ஐதேகவுக்கு கடும், சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக நிறுத்தி மைத்திரிபால சிறிசேனவை அதிபராக்கியமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
அவர் நாட்டு மக்களுக்கும், ஐதேகவுக்கும் துரோகம் இழைத்து விட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.
மங்கள சமரவீரவும் இதே கருத்தை வெளியிட்டதுடன், சிறிலங்கா அதிபருக்கு எதிராக குற்றவிசாரணைப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது பற்றி ஆலோசித்து வருவதாக கூறியிருந்தார்.
அதேவேளை, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, சிறிலங்கா அதிபருக்கு எதிராக குற்றவிசாரணைப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது தொடர்பாக நேற்று ஆலோசனைகளை நடத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து, சிறிலங்கா பிரதமரிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கான யோசனைகள் கிடைத்துள்ளன. இப்போது நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்றே கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.