வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை
புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ‘ஏக்கிய ராஜ்ய’ மற்றும், ‘ஒருமித்த நாடு’ என்ற பதங்கள் தொடர்பாக, புதிய அரசியலமைப்பை வரைவதற்கான வழிநடத்தல் குழுவின் நேற்றைய கூட்டத்திலும், இறுதி முடிவு எட்ட முடியாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அரசியலமைப்பை வரைவதற்கான வழிநடத்தல் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதன்போது, புதிய அரசியலமைப்பு வரைவை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கையை, எதிர்வரும் நொவம்பர் 9ஆம் நாள் அரசியலமைப்பு பேரவையில் ( நாடாளுமன்றம்) சமர்ப்பிப்பதென முடிவு செய்யப்பட்டது.
நேற்றைய கூட்டத்தில், இந்த அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கில மொழியாக்கங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது,
அறிக்கையின் மொழியாக்கப் பிரதிகளை ஒப்பீடு செய்து ஆராய்வதற்கு தமக்கு காலம் தேவைப்படுவதாக, வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.
‘ஒருமித்த நாடு’ என்ற தமிழ்ப் பதம், ‘ஏக்கிய ராஜ்ய’ என்ற சிங்களப் பதத்துக்கு இணையானதா என்று வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்கள் பலரும், கேள்விகளை எழுப்பினர்.
இது சரியான மொழிபெயர்ப்பு தான் என்று விவாதங்கள் நடத்தப்பட்டன. இதன்போது பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன.
ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று வழிநடத்தல் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏக்கிய ராஜ்ய என்பதற்கு ஒருமித்த நாடு என்ற தமிழ் சொல் ஒரு பொழுதும் சரியானதாக இருக்க முடியாது. இது தமிழ் மக்களை ஏமாற்றும் தந்திரமாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ஆங்கிலத்தில் ‘யுனிற்றறி ஸ்ரேற்’ என்ற சொல் தமிழில் ஒரே அரசு என்பதுதான் சரி. கூட்டாட்சி மாகாண ஆட்சி பிரதேச ஆட்சி என்ற எதற்கும் இடம் கிடையாது. ஒரே தேசம் ஒரே அரசு போன்ற நிலைப்பாட்டில் இருந்து சிங்களம் மாறாது மாறாது. இதற்கு தமிழ்த் தேசியம் ஒன்றுதான் மாற்று.