என் அனுபவத்தில் பாடம் கற்றுள்ளார் மைத்திரி – என்கிறார் மகிந்த
தனது அனுபவத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாடம் படித்துள்ளார் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“தேர்தல் நடத்தப்பட வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாக கூட, அதிபர் தேர்தலை நடத்தமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.
இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்திய ஒருவர் விளைவுகளைச் சந்தித்தது பற்றி அவர் கூறியிருக்கிறார். அவரது அந்தக் கருத்துடன் மட்டும் நான் உடன்படுகிறேன்.
எனது அனுபவத்தில் இருந்து சிறிசேன பாடம் கற்றுள்ளார் என்பதற்கு தெளிவான சமிக்ஞை இதுவாகும். அவரது இந்த முடிவு விவேகமானது.
எனினும், நாங்கள் இருவரும், எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைப்பது குறித்து கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும், இணைந்து கொள்ளப் போவதாகவும், வதந்திகள் பரவுகின்றன. அவை அடிப்படையற்றவை” என்றும் அவர் கூறியுள்ளார்.