இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் ஆறு நாள் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பம்
இந்திய- சிறிலங்கா கடற்படைகள் இணைந்து நடத்தும் SLINEX-2018 கூட்டு கடற் பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் 13 ஆம் நாள் வரை, திருகோணமைலைக் கடற்பரப்பில் இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.
SLINEX கூட்டுப் பயிற்சி இதுவரையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே இடம்பெற்று வந்தது. இந்த ஆண்டில் இருந்து, SLINEX கூட்டுப் பயிற்சி ஆண்டு தோறும் நடைபெறவுள்ளது.
SLINEX-2018 கூட்டுப் பயிற்சியில் இந்தியத் தரப்பில் கூடுதலான கடற்படைக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் பங்கேற்கவுள்ளன.
இந்தியக் கடற்படையின் 3 போர்க்கப்பல்களும், இரண்டு கடல் கண்காணிப்பு விமானங்களும், ஒரு உலங்குவானூர்தியும் இந்தமுறை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
சிறிலங்கா தரப்பில் முதல் முறையாக விமானப்படை பங்கேற்கவுள்ளது.
இந்த ஆறு நாள் கூட்டுப் பயிற்சி துறைமுக மற்றும் ஆழ்கடல் என்று இரண்டு கட்டங்களாக இடம்பெறும்.
கூட்டுப் பயிற்சி, நிபுணர்களின் விரிவுரைகள், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல், உலங்குவானூர்தி மற்றும் கண்காணிப்பு விமானங்களின் நடவடிக்கைகள், ஆயுதப் பயிற்சி, தேடுதல் மற்றும் மீட்பு, என்பன கடலில் இடம்பெறும்.