நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான விக்னேஸ்வரனின் மனு நிராகரிப்பு
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ்வரன் தரப்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை, சிறிலங்கா உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த மனு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தரப்பில் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்றுமுன்தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழு அதனை நிராகரித்துள்ளது.
அதேவேளை, தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய முதலமைச்சருக்கு எதிராக, டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்கில், மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையும் பிற்போடப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கை செப்ரெம்பர் 28ஆம் நாளுக்கு உச்சநீதிமன்றம் பிற்போட்டுள்ளது.