காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரின் சடலங்களை அகற்ற உதவிய புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில், நீண்டநாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிகள் இருவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
2007ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை கடற்படைப் புலனாய்வு அதிகாரிகளாக இருந்த, கஸ்தூரிகே காமினி, துசார மென்டிஸ் ஆகிய இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்தினம் நேற்று பிணையில் செல்ல அனுமதித்தார்.
இவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கடவுச்சீட்டை முடக்கி வைக்குமாறும், உத்தரவிட்டார்.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் சடலங்களையும் திருகோணமலையில் இருந்த தடுப்பு முகாமில் இருந்து வெளியே கொண்டு செல்வதற்கு, ஏனைய சந்தேக நபர்களுக்கு உதவினார்கள் என்று இவர்கள் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.