மேலும்

வடக்கில் கட்டணமில்லா நோயாளர் காவுவண்டிச் சேவை- ரணில், மோடி ஆரம்பித்து வைப்பு

இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கட்டணமில்லா அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை நேற்று இந்திய, சிறிலங்கா பிரதமர்களால் கூட்டாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1990 சுவசெரிய என்று பெயரிடப்பட்ட இந்த அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை, தென் மற்றும் மேல் மாகாணங்களில் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,  வடக்கு மாகாணத்தில் நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபை மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து நேரலைக் காணொலி மூலம் இணைந்து கொண்டார்.

இந்திய, சிறிலங்கா பிரதமர்கள் இணைந்து, இந்த அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

தென் மற்றும் மேல் மாகாணங்களில் இந்த திட்டத்துக்காக 2016இல்  இந்தியா 88 நோயாளர் காவு வண்டிகளை உள்ளடக்கிய 7.5 மில்லியன் டொலரை கொடையாக வழங்கியது.

தற்போது ஏனைய 7 மாகாணங்களிலும் இந்தச் சேவையை விரிவுபடுத்துவதற்காக, 209 நோயாளர் காவு வண்டிகள், மற்றும் பயிற்சிகளுக்கான செலவுகளை உள்ளடக்கியதாக, 15.02 மில்லியன் டொலரை இந்தியா கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *