மேலும்

விஜயகலாவிடம் விளக்கம் கேட்டு விட்டு நடவடிக்கை – சிறிலங்கா பிரதமர்

விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் அரச நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“விடுதலைப் புலிகளை மீண்டும் கொண்டு வர வேண்டிய தேவை எவருக்கும் கிடையாது.  விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்று கூறிய விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரை கொழும்புக்கு வருமாறு அழைத்துள்ளேன். இங்கு வந்ததும், அவர் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து, அவருக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக தீர்மானிக்கப்படும்.

விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சபாநாயகர் ஏற்கவே, நடவடிக்கை எடுத்துள்ளார்.

எமது அரசியல் குழு உடனடியாக கூடி, இதுபற்றி கலந்துரையாடியிருந்தது.

விஜயகலாவின் தரப்பில் விளக்கத்தை அளிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். அவரது விளக்கத்தைப் பொறுத்து,  தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

அதேவேளை, நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *