மேலும்

வீட்டுத் திட்ட விவகாரத்தில் சீனத் தலையீடு – பொறியில் சிக்கியுள்ள கூட்டமைப்பு

வடக்கு- கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளைக் கட்டும் திட்டம் சீன நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இந்த திட்டம் சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறித்து இந்தியா கவலை எழுப்பியுள்ளதுடன், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

அதேவேளை, கடந்த மார்ச் மாதம் பதுளையில் இந்த நிறுவனம் அமைத்த மாதிரி வீட்டைப் பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அதனைப் போன்ற வீடுகளை வடக்கு- கிழக்கில் அமைப்பதற்கு இணங்கியிருந்தது.

இந்த மாதிரி வீட்டை அடிப்படையாக கொண்டு வடக்கு கிழக்கில் வீடுகளை அமைக்க இணங்குவதாக, அமைச்சர் சுவாமிநாதனுக்கு, இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், சீன நிறுவனம் வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் துணை போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

“இது ஒரு சீனாவின் திட்டம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. ஏனைய விபரங்களும் எங்களுக்குத் தெரியாது.

இது முன்னர் பரிந்துரைக்கப்பட்ட உலோக வீடுகளுக்கு மாற்றானதாக அறிவிக்கப்பட்டது. கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலையகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வீடுகளைப் பார்வையிட்டு,  திருப்தி வெளியிட்டனர்.

ஆனால் இப்போது தான், இது ஒரு சீனத் திட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும், மூலப் பொருட்கள் தொடர்பாகவும் சில கேள்விகள் எழுப்பப்டுகின்றன.

இது எமக்கு கவலை அளிக்கிறது. எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்ட போது, சிலவற்றை அறியவில்லை. இது எப்படிப் போகிறது என்று பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *