மேலும்

சிறிலங்கா தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரிடம் 6 மணிநேரம் விசாரணை

சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிசிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவே, சிசிர மென்டிசிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆறு மணித்தியாலங்கள், இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் சிசிர மென்டிஸ், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.

2015ஆம் ஆண்டு தற்போதைய கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அவர், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் அளித்த வாக்குமூலத்தில் இருந்து பெறுமதியான தகவல்கள் கிடைத்திருப்பதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *