வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்கு சிறப்புச் செயலணி – படைத் தளபதிகளுக்கு முன்னுரிமை
வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு, 48 பேர் கொண்ட சிறப்புச் செயலணி ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்துவதை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் இந்த உயர்மட்ட செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் செயலணியில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 15 அமைச்சர்கள், இரண்டு மாகாணங்களின் ஆளுனர்கள், இரண்டு மாகாணங்களினதும் முதலமைச்சர்கள், சில அமைச்சுக்களின் செயலர்கள், முப்படைகளின் தளபதிகள், மற்றும் இராணுவ, அரச அதிகாரிகளை உள்ளடக்கியதாக இந்தச் செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புச் செயலணியின் செயலராக சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, இந்தச் செயலணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செயலணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.