மேலும்

ரஷ்யாவுக்கான தூதுவராக பொறுப்பேற்க தயானுக்கு மகிந்த பச்சைக்கொடி

ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக கலாநிதி தயான் ஜெயதிலக  நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பச்சைக்கொடி காண்பித்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா மற்றும் பாரிசுக்கான தூதுவராக முன்னர் பணியாற்றிய கலாநிதி தயான் ஜெயதிலகவை ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார்.

கலாநிதி தயான் ஜெயதிலக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவராகவும், அவரது ஆலோசகராகவும் இருப்பதுடன் தற்போதைய அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்து வருபவர்.

அவரை ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்க சிறிலங்கா அதிபர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இது அரசியல் அவதானிகள் மட்டத்தில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, ரஷ்யாவுக்கான தூதுவராக கலாநிதி தயான் ஜெயதிலக பொறுப்பேற்பதற்கு, மகிந்த ராஜபக்சவின் ஆசி கிடைத்திருப்பதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *