மேலும்

பருத்தித்துறை பிரதேச சபையிலும் ஆட்சியமைத்தது கூட்டமைப்பு

பருத்தித்துறை பிரதேச சபைத் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு, ஈபிடிபி, ஐதேக, சிறிலங்கா பொது ஜன முன்னணி என்பன ஆதரவு அளித்துள்ளன.

இன்று பிற்பகல் இடம்பெற்ற பருத்தித்துறை பிரதேச சபையின் முதலாவது அமர்வில், தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், அ.சா. அரியகுமாரும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சார்பில், ஜெயபாலனும், தவிசாளர் பதவிக்குப் பிரேரிக்கப்பட்டு பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அ.சா. அரியகுமார் 13 வாக்குகளை பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, ஜெயபாலனுக்கு 4 வாக்குகள் மாத்திரம் கிடைத்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், ஈபிடிபியின் 3 உறுப்பினர்கள், ஐதேக மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலா 1 உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அரியகுமாருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, உப தவிசாளராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாலசிங்கம் தினேஸ் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *