மேலும்

கரவெட்டி பிரதேச சபையில் ஆட்சியமைக்க முயன்ற அங்கஜனின் தந்தை தோற்கடிப்பு

வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி)  பிரதேச சபைகயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிசாளர் பதவியைக்  கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது.

31 உறுப்பினர்களைக் கொண்ட வடமராட்சி தெற்குமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், தங்கவேலாயுதம் ஐங்கரனும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில், சதாசிவம் இராமநாதனும், தவிசாளர் பதவிக்காக முன்மொழியப்பட்டனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில், தங்கவேலாயுதம் ஐங்கரன் 11 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சதாசிவம் இராமநாதனுக்கு, 10 வாக்குகள் கிடைத்தன.

தங்கவேலாயுதம் ஐங்கரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் ஆதரவு அளித்திருந்தனர்.

சதாசிவம் இராமநாதனுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு உறுப்பினர்களும், ஈபிடிபியின் மூன்று உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் ஏழு உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூன்று உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கந்தர் பொன்னையா உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இங்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தலைமையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அதனைத் தோற்கடிக்கும் வகையில்- அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மற்றும்  தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன வாக்கெடுப்பில் இருந்து  ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *