மைத்திரியைச் சந்தித்தார் சம்பந்தன் – இன்றிரவு முடிவை அறிவிப்பார்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் பேச்சுக்களை நடத்தியுள்ளது.
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, இன்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவரது செயலகத்தில் சந்தித்தது.
இன்றிரவு தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக முடிவெடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்த முடிவு தெரியப்படுத்தப்படும் என்று இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா அதிபரிடம் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மீது அனைத்து தரப்பினரினதும் கவனம் தற்போது குவிந்துள்ளது.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலையும் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.