இன்று பிற்பகல் மோடியைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அனைத்துலக சூரியசக்தி கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றிருந்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
அவர் நேற்று மாலை இந்திய குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அத்துடன், மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி வந்துள்ள வெளிநாட்டுத் தலைவர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் அளித்த இராப்போசன விருந்திலும் சிறிலங்கா அதிபர் பங்கேற்றார்.
இன்று அனைத்துலக சூரிய சக்தி கூட்டமைப்பின் தொடக்க மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.
அதையடுத்து, சிறிலங்கா அதிபர் மற்றும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மதியபோசன விருந்து அளிக்கவுள்ளது.
அதேவேளை, இன்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால 25 நிமிடங்கள் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.