சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேசினார் இந்தியப் பிரதமர் மோடி
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அனைத்துலக சூரிய சக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாடு இன்று புதுடெல்லியில் ஆரம்பமானது. இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபரும் உரையாற்றியிருந்தார்.
இதையடுத்து, இன்று மதியம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக, இந்திய அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.