பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக விசாரணை நடத்தப்படாது
லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, கலந்துரையாடலுக்காகவே கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
“பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக எந்த விசாரணைகளும் நடத்தப்படாது. என்ன நடந்தது என்று நாங்கள் அவருடன் பேச வேண்டியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் விளைவாக, இராஜதந்திர அழுத்தங்கள் இருந்தன. இது நாட்டின் நற்பெயருடன் தொடர்புபட்டிருப்பதால், கலந்துரையாட வேண்டிய தேவை உள்ளது.
இது ஒரு தீவிரமான குற்றமல்ல என்பதே இராணுவத்தின் கருத்து.
அவரை ஒரு பகுதியினர் ஆதரிக்கின்றனர். இன்னொரு பகுதியினர் விமர்சிக்கின்றனர். இந்த நிலையில், என்ன நடந்தது என்று கண்டறிய வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.