மீண்டும் சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறார் ரணில்
அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன்,, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கூட்டு அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள நெருக்கடியைத் தீர்ப்பது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பலமுறை பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும், எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், மீண்டும் அடுத்தவாரம், சிறிலங்கா அதிபரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இதுபற்றிக் கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க,
“ சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூட்டு எதிரணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இது வாக்காளர்கள் எமக்கு வழங்கிய எச்சரிக்கை.
வெள்ளம், வரட்சி போன்றவற்றினால் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் பாதிக்கப்பட்டது, விலைவாசி உயர்வு கடந்த ஒரு ஆண்டு காலத்தில் முக்கிய பிரச்சினையாக இருந்தது.
ஜனவரி 8 வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்றியிருக்கிறோம். சில வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக வந்தால், அந்தப் பிரச்சினையை சபாநாயகர் தான் தீர்த்து வைக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.