பெப்ரவரி 6ஆம் நாள் கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்
அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் நாள் நடைபெறும் என்று சிறிலங்கா நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் அறிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் முன்னைய ஆட்சிக்காலத்தில் நடந்த பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகார மீறல்கள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்து விவாதிக்கவே சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வரும் பெப்ரவரி 8ஆம் நாள் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் தெரிவித்திருந்தார்.
உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் முடிந்த பின்னர் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படுவதை தேர்தல்கள் ஆணைக்குழு விரும்பாத நிலையில், எதிர்வரும் 6ஆம் நாள் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.