அஞ்சல் மூல வாக்களிப்புக்கு முல்லைத்தீவு, கிளிநொச்சியில் இருந்து குறைந்தளவு விண்ணப்பங்கள்
உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்தே, குறைந்தளவினலான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டதாக சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அஞ்சல் மூல வாக்காளர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்ட அவர்,
“உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு, 601,000 அரச பணியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அவற்றில், 41,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
தவறான முறையில் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததால் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. சில விண்ணப்பங்கள் தாமதமாக கிடைத்ததாலும் நிராகரிக்கப்பட்டன.
560,120 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. குருநாகல மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 67,411 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன.
அதையடுத்து கண்டி மாவடத்தில் இருந்து, 48,353 விண்ணப்பங்களும், அனுராதபுர மாவட்டத்தில் இருந்து, 45,261 விண்ணப்பங்களும், கம்பகா மாவட்டத்தில் இருந்து, 41,049 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.
அஞ்சல் மூல வாக்களிப்புக்கான குறைந்தபட்ச விண்ணப்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்டன. அங்கிருந்து, 1,558 விண்ணப்பங்களும், அதையடுத்து, கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 2,208 விண்ணப்பங்களும், கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.