மேலும்

மிக் கொள்வனவில் கோத்தா மோசடி செய்த பணம் ஹொங்கொங்கில் முதலீடு

gotabhayaஉக்ரேனிடம் இருந்து மிக்-29 போர் விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் மோசடி செய்யப்பட்ட பணம் ஹொங்கொங் வங்கி ஒன்றில் பதுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று நடந்த ஐதேகவின் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

”உக்ரேனில் இருந்து முன்னைய அரசாங்கம் மிக் போர் விமானங்களை தலா ஒவ்வொன்றும் 7.2 மில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்திருந்தது. எனினும், அதிகாரபூர்வ ஆவணங்களில் 14.7 மில்லியன் டொலருக்கு அவை கொள்வனவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச 7.5 மில்லியன் டொலரை எடுத்து, ஹொங்கொங் வங்கி ஒன்றில் வைப்பிட்டுள்ளார்.

மிக் போர் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான விபரங்களை மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அம்பலப்படுத்தினார். இதுபற்றிய விபரங்கள் இப்போது, சட்டமா அதிபரிடம் உள்ளது.

மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்துமாறு அரசாங்கம் கேட்டுள்ளது.

எனினும், முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் தலையீட்டினால்  சில வழக்குகளில் தாமதம் ஏற்பட்டது.

நீதிஅமைச்சராக இருந்த போது, அவர் மகிந்த ராஜபக்சவுடன் இரகசிய தொடர்புகளை வைத்திருந்துள்ளார்.

இப்போது புதிய நீதி அமைச்சர் வழக்குகளை துரிதப்படுத்துவார். இதன் மூலம், ராஜபக்ச குடும்பம் 2020இல் வெலிக்கடைக்குச் செல்லும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *