மேலும்

பலாலிக்கு வழிதெரியாமல் திணறிய விமானி – மயிரிழையில் தப்பினார் சிறிலங்கா அமைச்சர்

mahinda-amaraweeraவிமானிக்கு வழி தெரியாததால், சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீர பயணம் செய்த உலங்குவானூர்தி, நீண்ட நேரம் வானில் சுற்றிய பின்னர் பலாலி விமான நிலையத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வல்வெட்டித்துறையில் நேற்று மாலை நடந்த பட்டத் திருவிழாவில் பங்கேற்க சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீர, கொழும்பில் இருந்து உலங்குவானூர்தி மூலம் பலாலிக்குப் பயணமானார். எனினும், விமானி உலங்குவானூர்தியை மன்னார் நோக்கி செலுத்தியுள்ளார்.

பலாலிக்குப் பதிலாக மன்னார் தீவு நோக்கி உலங்குவானூர்தி பறந்து கொண்டிருப்பதை அவதானித்த அமைச்சர், இதுபற்றி விமானியிடம் வினவிய போதே, பலாலி விமான நிலையம் செல்வதற்கான வழி தனக்குத் தெரியாது என்று பதிலளித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர், கூகுள் வரைபடத்தின் உதவியுடன் உலங்குவானூர்தியை செலுத்துமாறு விமானியிடம் கூறியுள்ளார்.

அதன்படி, நீண்ட நேரம் தடுமாறித் தடுமாறிப் பயணித்து, பலாலி விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

கொழும்பில் இருந்து புறப்பட்டு சுமார் 45 நிமிடங்கள் தொடக்கம் ஒரு மணித்தியாலத்துக்குள் பலாலியை சென்றடைய வேண்டிய உலங்குவானூர்தி 2 மணிநேரம் கழித்தே, அங்கு சென்றடைந்தது.

நீண்டநேரம் வானத்தில் வட்டமிட்டதால், உலங்குவானூர்தியின் எரிபொருளும் தீர்ந்து போயிருந்தது.

இதையடுத்து, விமானியின் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, பட்டத் திருவிழாவை முடித்துக் கொண்டு அமைச்சர் மகிந்த அமரவீர தரைவழியாக கொழும்பு திரும்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *