மைத்திரியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே – உச்சநீதிமன்றம் விளக்கம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம், அதிபர் செயலகத்துக்கு அறிவித்திருப்பதாக, தெரிவிக்கப்படுகிறது.
தமது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளா அல்லது ஆறு ஆண்டுகளா என்பதை தெளிவுபடுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் உச்சநீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க தலைமை நீதியரசர் பிரியசாத் டிடப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழு அமைக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது.
இதையடுத்தே, சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் மாத்திரமே என்று உச்சநீதிமன்ற நீதியரசர்களின் அமர்வு ஒருமனதாக முடிவெடுத்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழு தமது முடிவை நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.