ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதில் இழுபறி
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை தொடர்பாக விவாதிக்க சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் அவசரமாக கூட்டப்பட்டது.
விசாரணை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இன்று இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
அடுத்தவாரமே இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தமக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய சற்று முன்னர் சபைக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.