ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறிலங்காவின் மீன் ஏற்றுமதி 45.9 வீதத்தினால் அதிகரிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறிலங்காவின் மீன் ஏற்றுமதி 45.9 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக, கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் இருந்து மீன் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. இந்த தடை கடந்த 2016 ஜூன் 22ஆம் நாள் நீக்கப்பட்டது.
இந்த தடை நீக்கப்பட்ட காலம் தொடக்கம், 2017 நொவம்பர் 1ஆம் நாள் வரையிலான காலப்பகுதியிலேயே ஐரோப்பிய ஒன்றியத்துக்கான, மீன் ஏற்றுமதி 45.9 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் செப்ரெம்பர் வரையான காலப்பகுதியில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 18,262 மெட்றிக் தொன் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம், 28,685 மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 45.9 வீத அதிகரிப்பாகும். வருமான ரீதியாக இது 47.7 வீத அதிகரிப்பாகும்.