உள்ளூராட்சித் தேர்தல் – மட்டக்களப்பில் 79 வேட்புமனுக்கள் ஏற்பு
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 79 வேட்புமனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இரண்டாவது கட்டமாக, வேட்புமனுக்கள் கோரப்பட்ட, 17 மாநகர சபை, 23 நகர சபை, 208 பிரதேச சபை உள்ளிட்ட 248 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று நண்பல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 உள்ளூராட்சி சபைகளுக்காக 81 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 2 தேசிய மக்கள் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஏனைய 79 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு, 12 அரசியல் கட்சிகள், 5 சுயேட்சைக் குழுக்களும், காத்தான்குடி மாநகரசபைக்கு 8 அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சை குழுக்களும், போட்டியிடுகின்றன.
கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்காக 9 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்காக 7 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், போரதீவுபற்று பிரதேச சபைக்காக 7 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்காக 5 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேட்சைக்குழுவும், மண்முனை தென் பிரதேசசபைக்காக 7 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும், போட்டியிடுகின்றன.
இங்கு, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளன.