பழிவாங்கியதா ரஷ்யா? – சிறிலங்கா சந்தேகம்
அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா தடை விதித்தமைக்கு பழிவாங்கும் வகையிலேயே, சிறிலங்கா தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தடை விதித்திருக்கக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
வரும் ஜனவரி மாதம் தொடக்கம் வெள்ளை அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கான தடையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.
சிறிலங்காவுக்கு அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை ஏற்றுமதி செய்யும் பிரதான நாடாக ரஷ்யாவே இருந்து வருகிறது.
இந்தநிலையிலேயே, சிறிலங்கா தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா விதித்த தடைக்கும், அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கு சிறி்லங்கா விதித்த தடைக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசநாயக்க இந்த சந்தேகத்தை கிளப்பினார்.
இந்த இரண்டுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
அத்துடன், “ இந்தப் பிரச்சினையை விரைவாகத் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ரஷ்ய அதிபர் புடினுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
நானும், நிபுணர்களின் குழுவொன்றுடன் எதிர்வரும் 25ஆம் நாள் மொஸ்கோ செல்லவுள்ளேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.