வேட்புமனுப் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம் – என்கிறார் சம்பந்தன்
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தயாரிப்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர்,
“அரசியல் கூட்டணிகளில், குறிப்பாக வேட்புமனுக்களை தயாரிக்கும் போது, இதுபோன்ற விவகாரங்கள் அசாதாரணமானவை அல்ல.
நாங்கள் இந்தப் பிரச்சினைகளை இணக்கமான முறையில் தீர்த்துக் கொள்வோம்.” என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான, புளொட் தலைவர் சித்தார்த்தனும், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், வேட்புமனுக்கள் தொடர்பாக தமிழ் அரசுக் கட்சியுடன் கருத்து வேறுபாடுகள் இருப்பதை உறுதி செய்துள்ள போதிலும், தனி வழியில் செல்வதற்கு முடிவுகள் எதையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் நலன் கருதி, இந்தப் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காண முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.