சிறிலங்கா தேயிலைக்குத் தடை – அவசர பேச்சு நடத்த மூன்று அமைச்சர்கள் ரஷ்யா பயணம்
சிறிலங்காவில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், இது தொடர்பாக அவசர பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறிலங்காவின் மூன்று அமைச்சர்கள் மொஸ்கோவுக்குச் செல்லவுள்ளனர்.
சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதி ஒன்றில் வண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து. சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக தடையை விதித்துள்ளது.
நாளை தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ள இந்த தடை சிறிலங்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சிறிலங்காவின் தேயிலையை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பாக மொஸ்கோவுடன் அவசர பேச்சுக்களை நடத்துவதற்கு சிறிலங்கா அமைச்சர்கள் மூவர் அடுத்தவாரம் ரஷ்யா செல்லவுள்ளனர்.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசநாயக்க, வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் அடுத்த வாரம் மொஸ்கோ சென்று தடையை நீக்குவது குறித்துப் பேசவுள்ளார்.
அத்துடன் கைத்தொழில் விஞ்ஞான அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்தவும் அடுத்தவாரம் தனியாக ரஷ்யா சென்று இதுதொடர்பாக பேச்சுக்களை நடத்தவுள்ளார்.