4000 மில்லியன் ரூபாவை விழுங்கும் உள்ளூராட்சித் தேர்தல்
ஒரே நாளில் நடத்த எதிர்பார்த்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கு சுமார் 4000 மில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் வரலாற்றில், உள்ளூராட்சித் தேர்தல் நாடெங்கும் ஒரே நாளில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த தேர்தலில் 8000இற்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பணிகளுக்கு 3 இலட்சம் அரச பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். நாடெங்கும் சுமார் 14000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
அரசியல் கட்சிகளின் தேர்தல் பயன்பாடுகளுக்கு அரச சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு டிசெம்பர் 4ஆம் நாள் தொடக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.
அரச சொத்துக்களையோ, மத வழிபாட்டு இடங்களையோ தேர்தல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதமாகும்.
தேர்தல் முடியும் வரை அரசாங்க நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு, தேவையான பெண் வேட்பாளர்களை உள்ளடக்கியதாக, வேட்புமனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
15 மில்லியன் வாக்காளர் அட்டைகள், ஜனவரி மூன்றாவது வாரத்தில் வாக்காளர்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.