வடக்கு, கிழக்கு கடலில் இறங்கத் தடை – நாளை தொடக்கம் காற்றுடன் கடும் மழை?
வடக்கு, கிழக்கு, தென் மாகாணங்களில் உள்ள மீனவர்களை மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மையம் எச்சரித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கத்தினால், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதாலும், கடும் காற்று வீசும் என்பதாலுமே மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் சிறிலங்காவில் இருந்து 1300 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள இந்த தாழமுக்கம், 24 மணிநேரத்தில் மேலும் வலுப்பெறும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் வடக்கு, கிழக்கு, தென் மாகாணங்களில் கடும் காற்று வீசும் என்றும், வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரையான கடும் மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.