நுவரெலியவில் நான்கு புதிய பிரதேச சபைகளை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்
நுவரெலிய மாவட்டத்தில் நான்கு புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது. அம்பேகமுவ மற்றும் நுவரெலிய பிரதேசசபைகளைப் பிரித்து, புதிதாக நான்கு பிரதேச சபைகள் உருவாக்கப்படவுள்ளன.
இந்த இரண்டு பிரதேச சபைகளிலும் அதிகளவு வாக்காளர்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டு புதிய பிரதேச சபைகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் முன்வைக்கப்பட்டது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அம்பேகமுவ, நுவரெலிய பிரதேசசபைகளை பிரித்து புதிய சபைகளை உருவாக்காமல், உள்ளூராட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்று மலையக அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தத்தை அடுத்தே, புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.