மேலும்

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் வடக்கு, கிழக்கில் முதலீடு செய்வதில்லை- இந்திய மாநாட்டில் மகிந்த

mahinda-india (1)வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் வடக்கு, கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அவுரங்காபாத் நகரில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக பௌத்த மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கடந்த இரண்டு பத்தாண்டுகளில் கொழும்பில் வானுயர்ந்த கட்டடங்கள் பல எழுந்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களால் தான் கொழும்பில் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் எழுச்சி தோற்றம் பெற்றது.

வடக்கு, கிழக்கில் தனிநாட்டுக்கான போர் உச்சநிலையில் நடந்து கொண்டிருந்த போதும் கூட, கொழும்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்குவதற்காக பெருமளவு நிதியை அவர்கள் செலவிட்டார்கள்.

போர் முடிவடைந்த பின்னரும் கூட, வடக்கு, கிழக்கில் முதலீடுகளை செய்யவில்லை. கொழும்பில் தான் முதலீடு செய்கின்றனர்.

mahinda-india (1)mahinda-india (2)mahinda-india (3)

கொழும்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மலிவானவை அல்ல. கொழும்பில் சொத்துக்களின் மதிப்பு, பல மேற்குலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ள சொத்துக்களின் விலைக்கு, இணையானது.

பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களுடன் இணைந்து வாழ்வது சாத்தியமில்லை என்றால்,  பெருமளவு நிதியை யாரும் கொழும்பில் முதலீடு செய்திருக்க முடியாது.

கொழும்பு நகரின் சனத்தொகையில் பெரும்பான்மையாக இருப்பது, நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் அல்ல.  இது உலகிற்கு ஒரு முன்னுதாரணம்.

சிறிலங்காவில் பெரும்பான்மையான தமிழர்கள், வடக்கு, கிழக்கிற்கு வெளியில், சிங்கள மக்கள் மத்தியில் தான் நிரந்தரமாக, வசிக்கின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *