யாழ். பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுக்குத் தடை – விடுதிகளில் இருந்து வெளியேற உத்தரவு
யாழ். பல்கலைக்கழக பிரதான வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக வாயில்களை மூடி, பல்கலைக்கழக சமூகத்தினர், நேற்று போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இன்றும் இந்தப் போராட்டம் தொடர்ந்த நிலையிலேயே, யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் ஆகியவற்றின் கல்விச் செயற்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பீடாதிபதிகளுடன் நடத்திய கூட்டத்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக பிரதான வளாகத்துக்குள் மாணவர்கள் நடமாடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் துணைவேந்தர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாணவர்களை விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.