நாடாளுமன்றத்துக்கு குண்டு வைப்பதிலேயே வீரவன்சவின் கட்சி குறி
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியலமைப்பை நிறைவேற்றினால் நாடாளுமன்றத்துக்குக் குண்டு வைக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அண்மையில் தனது நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போது, நாடாளுமன்றத்தின் மீது குண்டு வீச வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு அவரது கட்சிக்குள்ளேயும், அரசியல் மட்டத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து சபாநாயகரும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான பியசிறி விஜேநாயக்க நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், விமல் வீரவன்சவின் கருத்து கட்சியின் கருத்து அல்ல என்றும், நாடாளுமன்றம் மீது குண்டுவீச வேண்டும் என்று கூறியதற்காக அவர் பொதுமன்னிப்புக் கோர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அங்கு அவர், “இடைக்கால அறிக்கையில், காணி, நிதி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆளுனர்களின் அதிகாரங்களைக் குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியலமைப்பை 5ன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் அங்கீகரித்தால், அதன் பின்னர் நாடாளுமன்றத்துக்கு குண்டு வைக்க வேண்டும்.
அதற்குப் பின்னர் நாடாளுமன்றம், அமைச்சரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.