ஜப்பானிய போர்க்குற்ற தீர்ப்பாய நீதிபதி மோட்டூ நுகுசி சிறிலங்காவுக்கு இரகசிய பயணம்
கம்போடியாவில் போர்க்குற்றங்களை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இடம்பெற்றிருந்த ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி, சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நீதிபதி மோட்டூ நுகுசி மூன்று பேர் கொண்ட ஜப்பானிய குழுவுக்குத் தலைமை ஏற்று சிறிலங்கா வந்துள்ளார்.
இந்தக் குழுவினர் நேற்றுமுன்தினம் காலை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, சிறிலங்கா விமானப்படைத் தளபதி கபில ஜெயம்பதி, கடற்படைத் தளபதி அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும், போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி, எதற்காக சிறிலங்கா வந்துள்ளார் என்ற தகவல்கள் ஏதும் சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை.
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க சிறிலங்கா அரசாங்கத்தின் உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு மோட்டூ நுகுசியின் ஆலோசனைகளை சிறிலங்கா பெறவுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவர் முன்னரும் பலமுறை சிறிலங்காவுக்குப் பயணங்களை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.