மீண்டும் போட்டியிட்டால் மைத்திரியைத் தோற்கடிப்போம் – ஜேவிபி எச்சரிக்கை
சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்போம் என்று ஜேவிபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,
“அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு தார்மீக உரிமை கிடையாது.
மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை மீறி அடுத்த அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்டால், மகிந்த ராஜபக்சவைப் போலவே அவரையும் மக்கள் தோற்கடிப்பார்கள்.
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது குறித்த தனது நிலைப்பாட்டை சிறிலங்கா அதிபர் வெளிப்படுத்த வேண்டும்.
மீண்டும் ஒரு அதிபர் தேர்தல் வேண்டாம் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். மாதுளுவாவே சோபித தேரரின் இறுதிச்சடங்களில் அதனை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்.
எனவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சி எத்தகைய நிலைப்பாட்டை எடுத்தாலும், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தார்மீக உரிமை அவருக்குக் கிடையாது.
மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அவர் காப்பாற்ற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.