மேலும்

சுதந்திரக் கட்சிக்குள் சிறிசேன நடத்தும் போராட்டம்

maithriஉள்ளுராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற தனது பதவியை மேலும் தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கடந்த வியாழன் பிற்பகல், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் மைத்திரிபால சிறிசேன தனித்தனியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இக்கலந்துரையாடலானது காலியிலுள்ள கலுவெல்ல சினமன் ஹில்டொப் விடுதியில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் எந்தவொரு அறிக்கையாளர்களோ, செயலர்களோ அல்லது அதிகாரிகளோ அனுமதிக்கப்படவில்லை.

அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரியும், ஊடகவியலாளரும் சட்டவாளருமான சிறிலங்காவில்  பௌத்த மறுமலர்ச்சி அமைப்பிற்கு வித்திட்டவருமான கேணல் கென்றி ஸ்ரீல் ஒல்கொற் சிறிலங்காவில் வசித்த கீழ்த்தள அறையில் இருந்தவாறே அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது கட்சியின் உறுப்பினர்களுடன் சந்திப்பை மேற்கொண்டார்.

வியாழன் இரவு 7 மணியளவில் இந்தச் சந்திப்பு ஆரம்பமானது. மைத்திரிபால சிறிசேன தனது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களை ஒவ்வொருவராக அழைத்து கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சினைகள், எதிர்காலத்தில் தமது கட்சியின் சார்பாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில் ஏற்படும் இடர்கள் தொடர்பாக அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் எடுத்துக் கூறினார்கள்.

இவ்வாறான சந்திப்பை பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் மேற்கொள்வதற்கு தான் திட்டமிட்டுள்ளதாக சிறிசேன தனது கட்சியின் உறுப்பினர்களிடம் தெரிவித்தார். இந்தச் சந்திப்பானது நள்ளிரவு 11 மணி வரை இடம்பெற்றது.

மீண்டும் மறுநாள் காலை 10 மணி வரை சிறிசேன தனது கட்சி உறுப்பினர்களை தனித்தனியாகச் சந்தித்தார். இதன் பின்னர் சிறிசேன உலங்குவானூர்தி மூலம் பொலன்னறுவைக்குப் புறப்பட்டார்.

பொலன்னறுவை, கதுறுவெல பிரதேசத்தில் மும்மொழி தேசிய பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல்லை அதிபர் சிறிசேன நாட்டினார். இந்த நிகழ்வில் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்தியாவின் உயர் ஆணையாளர் தரன்ஜித் சிங் சந்துவும் கலந்து கொண்டார்.

இதேவேளை கலுவெல்ல சினமன் ஹில்டொப் விடுதியில் ஒன்று கூடியிருந்த சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை மதிய உணவு இடைவேளை வரை செயலமர்வு ஒன்றில் ஈடுபட்டனர். இவர்கள் இந்தச் செயலமர்வில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் தொடர்பாகவும் இதில் சுதந்திரக் கட்சிக்கான வாக்குகளை எவ்வாறு பலப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

SLFP may day (2)

பல்வேறு தேர்தல் தொகுதிகளிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகங்களைத் திறப்பது தொடர்பாகவும் கட்சி உறுப்புரிமையை அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இது உண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கான ஒரு சவாலான பணியாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது தன்னுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியை மட்டுமல்லாது மகிந்த ராஜபக்சவின் ஆதரவுக் கட்சியான சிறிலங்கா பொதுசன முன்னணியையும் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட வேண்டிய நிலையிலுள்ளது.

பொதுஜன முன்னணியில் மகிந்தவிற்கு விசுவாசமானவர்களும் முன்னர் சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்தவர்களுமே உறுப்பினர்களாக உள்ளனர். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளியன்று தனது தேர்தல் தொகுதியான பொலன்னறுவைக்குப் பயணம் செய்த போது வட மத்திய மாகாண சபையைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் 13 உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுசன முன்னணியில் இணைந்து கொண்டனர்.

இவ்வாறான கட்சி தாவல்கள் இடம்பெறலாம் என்கின்ற ஊகிப்பின் காரணமாகவே மூன்று மாகாண சபைத் தேர்தல்களை சிறிசேன பிற்போட்டுள்ளார். இதில் வடமத்திய மாகாணமும் ஒன்றாகும்.

சிறிசேனவின் தேர்தல் தொகுதியான பொலன்னறுவை உள்ளடங்கியுள்ள வடமத்திய மாகாண சபையின் காலப்பகுதி செப்ரெம்பர் 30ல் முடிவடைந்து விட்டது.

இதேபோன்று சப்ரகமுவ மாகாண சபையின் காலப்பகுதியானது செப்ரெம்பர் 26 இலும் கிழக்கு மாகாண சபையின் காலப்பகுதி ஒக்ரோபர் 01 உடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் அதிபர் சிறிசேன பிற்போட்டுள்ளார்.

சிறிசேனவிற்கு எதிராக கடந்த சில மாதங்களாக அவரது வட்டாரங்களிலிருந்து மிகப் பலமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக நடப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மிக முக்கிய பொருளாதார மற்றும் சமூக சேவைப் பொறுப்புக்களை வழங்கியதால் தமது வாக்காளர்களின் அதிருப்திக்கு ஆளாகி வருவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வாறான விமர்சனத்தை முன்வைத்த அமைச்சர்களில் ஒருவரான சுசில் பிறேமஜயந்த வெளிநாட்டிற்குச் சென்றதால் காலியில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. சிறிலங்கா அதிபர் ஐ.தே.க சார்பாகச் செயற்படுவதாக விமர்சனம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களான டுலிப் விஜயசேகர மற்றும் சுசந்த புன்சிநிலமே போன்றோர் காலிச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறான விமர்சனங்களை முன்வைத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டீ சில்வா மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா ஆகியோர் காலிச் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

காலிக் கலந்துரையாடலுக்குச் சென்ற போதும் அதிபர் சிறிசேனவுடன் தனியான சந்திப்பை மேற்கொள்ளாத அமைச்சர்களில் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, துமிந்த  திசநாயக்க மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் உள்ளடங்குவர்.

தாங்கள் அதிபர் சிறிசேனவுடன் அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொள்வதால் அதிபருடன் தனிப்பட்ட சந்திப்பை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை என இந்த அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இந்த அடிப்படையில், மாகாண  சபைத் தேர்தல்கள் தொடர்பான திருத்தச் சட்ட வாக்களிப்பிலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னரே, காலியில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைத் தனித்தனியாகச் சந்தித்தார்.

இதன் மூலம் கட்சிக்குள் உள்ள வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் கலந்து கொள்ள முடியும் என்கின்ற நம்பிக்கையிலேயே இச்சந்திப்பை சிறிசேன மேற்கொண்டார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் சுயேட்சை என்ற பெயரில் எதிர்க்கட்சி வரையில் அமர்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன என்ற சந்தேகத்தின் பேரில் இதனை முறியடிப்பதற்காகவும் சிறிசேனவால் இத்தனிச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறிலங்கா கடற்படையின் வருடாந்த காலிக் கலந்துரையாடலில் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புத் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக சிறிசேனவில் காலிக் கலந்துரையாடல் பேசப்படவில்லை.

குறிப்பாக சிறிசேனவின் காலிக் கலந்துரையாடலானது நடைபெறவுள்ள தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளைப் பலப்படுத்துதல் மற்றும் கட்சிக்காக புதிய தேர்தல் ஒழுங்குபடுத்துனர்களை தெரிவு செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மேலும் இளைஞர்களை உள்வாங்குவதற்கான பணிகளில் சிறிசேன ஈடுபட்டுள்ளார்.

தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படாத உறுப்பினர்களை அதிலிருந்து விலக்குவது தொடர்பான முக்கிய தீர்மானம் ஒன்றை சிறிசேன தெரிவித்தார். இவ்வாறான உறுப்பினர்கள் கட்சிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான காணொலிகளைச் சேகரிப்பதற்கான காணொலிக் கருவிகளும் தற்போது ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த வியாழன் இரவு காலி சினமன் ஹில்டொப் விடுதியை வந்தடைந்த சிறிசேன அங்கு சுருக்கமான உரை ஒன்றை ஆற்றியிருந்தார்.

இவர் தனது உரையில் ‘ஐ.நா பொதுச் சபையின் 72வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பின்னர் நான் நாடு திரும்பிய போது இந்தியப் பத்திரிகை ஒன்றை நான் வாசித்தேன். அதில் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனுடன் ஒப்பிடும் போது சிறிலங்காவில் பொருளாதாரம் சிறப்பாகக் காணப்படுகிறது. ஆகவே எமது நாட்டின் பொருளாதாரமானது மேலும் வளர்ச்சியடைவதை உறுதிப்படுத்துவதற்காக அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

(சண்டே ரைம்ஸ் இதழில் வெளியான அரசியல் பத்தியின் ஒரு பகுதி)

வழிமூலம்      – சண்டே ரைம்ஸ்
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *