சிறிலங்கா கடற்படைப் படகு மோதி மீனவர் பலி – விசாரணை ஆரம்பம்
காரைநகர் கடற்பரப்பில் நேற்றுமுன்தினம் இரவு, மீன்பிடிப் படகு மீது சிறிலங்கா கடற்படைப் படகு மோதி மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் லங்காநாத திசநாயக்க தகவல் வெளியிடுகையில்,
“காரைநகர் கடற்படைத் தளத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளுக்கு வழிகாட்டிச் சென்ற சிறிலங்கா கடற்படையின் அதிரோக ரோந்துப் படகே, மீன்பிடிப் படகு மீது மோதியது.
6 கடல் மைல் வேகத்தில் சென்று கொண்டிருந்த போதே, நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இந்தச் சம்பவத்தின் போது ஒரு மீனவர் கடலில் குதித்து தப்பினார். மற்றவர் மீன்பிடிப் படகினுள் சிக்கிக் கொண்டார். படுகாயமடைந்த அவர், யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமானார்.
காரைநகர் வெடியரசன் வீதியைச் சேர்ந்த 38 வயதான, கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் என்பவரே மரணமானார். மற்றைய மீனவர் கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா கடற்படையும், காவல்துறையும் தனித்தனியாக விசாரணைகளை நடத்தி வருகின்றன” என்று தெரிவித்தார்.