இடைக்கால அறிக்கை குறித்து பங்காளிக் கட்சிகளுடன் ஆலோசனை – மாவை சேனாதிராசா
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக பங்காளிக் கட்சிகள், மற்றும் தமிழ் புலமையாளர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் அரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாறையில் இடம்பெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட, மாவை சேனாதிராசா, அம்பாறையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் இடைக்கால அறிக்கை தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களும், செயற்குழு உறுப்பினர்களும், தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
அத்துடன் இடைக்கால அறிக்கை தொடர்பான கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கருத்துக்களையும், தமிழ் புலமையாளர்களின் கருத்துக்களையும் அறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பங்காளிக் கட்சிகள் மற்றும் புலமையாளர்களுடன் இடைக்கால அறிக்கை தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.