ஒக்ரோபர் 9ஆம் நாள் சிறிலங்கா கடற்படையின் கடல் பாதுகாப்பு கருத்தரங்கு ஆரம்பம்
சிறிலங்கா கடற்படை ஆண்டு தோறும் நடத்தும் அனைத்துலக கடல்சார் கருத்தரங்கான ‘காலி கலந்துரையாடல்-2017’, வரும் ஒக்ரோபர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஒக்ரோபர் 9ஆம், 10ஆம் நாள்களில் இந்த கடல்சார் பாதுகாப்பு மாநாடு, கொழும்பு, கோல்பேஸ் விடுதியில் இடம்பெறும் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்தார்.
எட்டாவது ஆண்டாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், கடல்சார் பாதுகாப்புத் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறும். இதில் 38 நாடுகள் பங்கேற்கவுள்ளன.
2010ஆம் ஆண்டு சுமார் 100 பேராக இருந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பங்கேற்பு, 2017ஆம் ஆண்டு 200 பேராக அதிகரித்துள்ளது என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளின் கடற்படைத் தளபதிகள், உயர்மட்ட அதிகாரிகள், தூதுவர்கள், பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.