ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறிலங்கா – பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் மட்ட பேச்சில் இணக்கம்
இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு சிறிலங்கா – பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட 4 ஆவது அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா – பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான 4 ஆவது அதிகாரிகள் மட்டப் பேச்சுக்கள் கடந்த 23ஆம் நாள் பனாகொடவில் உள்ள சிறிலங்கா இராணுவ சமிக்ஞைப் படைப்பரிவு தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதில் மேஜர் ஜெனரல் ஹபீஸ் உர் ரஹ்மான் தலைமையிலான பாகிஸ்தான் இராணுவத்தின் 6 அதிகாரிகளும், சிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞைப் படைப்பிரிவின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க, மேஜர் ஜெனரல் ரேனுகா ரோவெல், பிஜரிகேடியர் பிரபாத் தெமடன்பிட்டிய உள்ளிட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் 15 பேர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேச்சுக்களின் போதே, இருதரப்பு இராணுவ ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது என்று இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் ஹபீஸ் உர் ரஹ்மான் பாகிஸ்தான் இராணுவத்தின் பிரதான தலைமையகத்தில் கட்டுப்பாட்டு, தொலைத்தொடர்பு, கணினிகள் மற்றும் புலனாய்வுப் பணியகத்தின் கட்டளைப் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.