செப்ரெம்பர் 26 முதல் மூன்று மாகாணசபைகளும் ஆளுனர்களின் கையில் – மார்ச்சில் தான் தேர்தல்
கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணசபைகள், செப்ரெம்பர் 26ஆம் நாளுக்குப் பின்னர் ஆளுனர்களின் கட்டுப்பாட்டில் வரும் என்று இங்கு மார்ச் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்காவின் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இந்த மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் செப்ரெம்பர் 26ஆம் நாள் முடிவுக்கு வந்த பின்னர், அவற்றின் நிர்வாகம் ஆளுனர்களின் கையில் இருக்கும்.
இனிவரும் தேர்தல்கள் கலப்பு முறையில் இடம்பெறவுள்ளதால், மாகாணசபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தொகுதி எல்லைகள் வரையறுக்கப்பட வேண்டும். அது நிறைவடையும் வரை, மூன்று சபைகளுக்கும் தேர்தலை நடத்த முடியாது.
வரும் மார்ச் மாதத்துக்குள் எல்லை மீள் நிர்ணயப் பணிகளை அரசாங்கம் முடித்து விடும். மார்ச் மாதம் தேர்தலை நடத்துவதற்கான ஒழுங்குகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கலாம்.
மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இந்த மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் முடிந்த பின்னர், தேர்தல் ஆணைக்குழு வேட்புமனுக்களைக் கோர வேண்டிய அவசியம் இல்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.