பாகிஸ்தானுடனும் அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களை ஆரம்பித்தது சிறிலங்கா கடற்படை
சிறிலங்கா- பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையிலான அதிகாரிகள் மட்டப் பேச்சுக்கள், சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.
சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கை பணிப்பாளர் றியர் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையிலான 10 கடற்படை அதிகாரிகள் சிறிலங்கா தரப்பில் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றனர்.
கொமடோர் மசூத் குர்ஷித் தலைமையிலான 5 கடற்படை அதிகாரிகள் பாகிஸ்தான் தரப்பில் இடம்பெற்றிருந்தனர்.
கள நடவடிக்கை ஒத்துழைப்பு, பயிற்சி, இராணுவ பரிமாற்றங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்தப் பேச்சுக்களில் கலந்துரையாடப்பட்டது.
இதுபோன்ற கலந்துரையாடலை ஆண்டு தோறும் நடத்தவும், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் பேச்சுக்களை நடத்தவும் இந்தச் சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டது.
சிறிலங்கா கடற்படை இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இதுபோன்ற கலந்துரையாடல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.