பிரதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அருந்திக பெர்னான்டோ
சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அருந்திக பெர்னான்டோவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்துள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், அருந்திக பெர்னான்டோ, பிரதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியி புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக பெர்னான்டோ, சில மாதங்களுக்கு முன்னர் ஜப்பானில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
அத்துடன், அரசாங்கத்தில் இருந்து ஒரு பகுதி சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வெளியேறி, மகிந்த அணியுடன் இணையவுள்ளதாகவும் கூறிவந்தார்.
இந்த நிலையில் அண்மையில் நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும், இவர் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுடன் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், இன்று பிரதிஅமைச்சர் பதவியில் இருந்து அருந்திக பெர்னான்டோ நீக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான அவசர கூட்டம் ஒன்றை சிறிலங்கா அதிபர் இன்றிரவு 8 மணியளவில் நடத்தவுள்ள நிலையில், அருந்திக பெர்னான்டோவின் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.