இன்று புதுடெல்லி செல்கிறார் மாரப்பன – நாளை மோடி , சுஸ்மாவுடன் சந்திப்பு
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மூன்று நாட்கள் பயணமாக இன்று இந்தியா செல்கிறார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் திலக் மாரப்பன மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இன்று புதுடெல்லி செல்லும் திலக் மாரப்பன, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன் நாளை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இதன் போது இருதரப்பு விவகாரங்கள் மற்றும் இந்திய – சிறிலங்கா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நாளை சந்திக்கவுள்ளார்.
நாளை மறுநாள் அவர் புதுடெல்லியில் இருந்து கொழும்பு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன், வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம், வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய மற்றும் சார்க் விவகாரங்களுக்கான பிரிவின் மூத்த பணிப்பாளர் நாயகம் ஏ.கே.கிரிஹகம ஆகியோரும் இந்தியா செல்லவுள்ளனர்.